சாதனையோட்டமிது; இவ்வுலகின்
வேதனை யோட்டமிது!
போதனை யோட்டமிது; பொய்யுலகின்
பெரும்புகழ் ஓட்டமிது.
தீவிலிருந்து புறப்பட்டு
திரண்டு யாழாலோடி
நாவில் தண்ணியற்று
நாள்பல கிடந்துண்டு
சாவின் வழிம்பு என்று
சாவகச் சேரி சேர்ந்து
ஏதும் உடமை யற்று
எங்கெங்கே அலைந்திருந்தோம்.
பாவியெம் பழி துறந்து
பாய்ந்தோடித் தோணி ஏறி
வன்னிக்காட்டு வனாந்தரங்கள்
வளர்ந்த நல் மரங்கள் தாண்டி
பூவாசம் கிடைக்கும் என்று
‘பூந்தோட்ட’ முகாம் சென்றோம்.
நாய் வேச மென்னவென்று
நல்லாய்த் தெரிந்துகொண்டோம்.
இது தான் நிலையென்றும்
இன்னுமெம் முயிர் பிடித்து
ஊர் வாசம் காணவென்று
உலகெல்லாம் ஓடுகின்றோம்.
No comments:
Post a Comment